தென்கயிலாயம் எனப்போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும், இங்கு ஆண்டுதோறும் சித்திரைத்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.
அதன்படி சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 21-ம்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து அம்பாளும், தாயுமானவர்(சிவபெருமானும்) காமதேனு, ரிஷபம், யானை, தங்ககுதிரை, நந்திகேசர், கைலாசபர்வதம், அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வந்தனர்.
தொடர்ந்து 5 ஆம் நாளன 25 ஆம் தேதி செட்டிப்பெண் பிரசவம் பார்த்தல் வைபவமும், ஆறாம் நாளான 26 ஆம் தேதி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் இன்று காலை தொடங்கியது,
மலைக்கோட்டை தாயுமானசுவாமி, அலங்கரிக்கப்பட்ட மிகப்பெரிய திருத்தேரில் அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மற்றொரு தேரில் மட்டுவார் குலழம்மை தாயார் எழுந்தருளினார். முன்னதாக பரிவார மூர்த்திகள் சிறிய தேரில் சென்றன.
ஏராளமான பக்தர்கள் ஓம் நமச்சிவாய என்ற பக்தி கோஷமிட்டவாறு தேரைவடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.
தேர் ஆண்டாள் வீதி, சின்ன கடை வீதி, என்.எஸ்.பி ரோடு, நந்தி கோவில் தெரு உள்ளிட்ட வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலைக்கு சென்றது.
மலைக்கோட்டை தேரோட்டத்தை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பிற்காக திருச்சி மாநகர காவல்துறை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
