திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பழைய பிளாஸ்டிக் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

பொன்னேரியை அடுத்த தத்தைமஞ்சி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பழைய பிளாஸ்டிக் சேகரிப்புக் கிடங்கில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கிடங்கில் இருந்தவை எளிதில் தீப்பற்றக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் என்பதால் தீ மளமளவெனப் பரவி, வானுயரக் கரும்புகையுடன் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

தீ விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் பொன்னேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காற்றின் வேகம் காரணமாகப் பிளாஸ்டிக் பொருட்கள் கட்டுக்கடங்காமல் எரிந்ததால், தண்ணீருடன் ரசாயனக் கலவையையும் சேர்த்துப் பீய்ச்சி அடித்துத் தீயைக் கட்டுப்படுத்தினர்.

பிளாஸ்டிக் பொருட்கள் பெருமளவில் எரிந்து சாம்பலாகி வருவதால், அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்தது. இதனால் ஏற்பட்ட கடுமையான துர்நாற்றம் காரணமாக, சுற்றியுள்ள கிராம மக்களுக்குச் சுவாசக் கோளாறு உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டது.

இந்த விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது இதற்குப் பின்னணியில் ஏதேனும் சதி வேலைகள் உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறை நாள் என்பதால் ஊழியர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version