முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவதாக தவெக வேட்பாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் , 1821 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
அவரது வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் வி.பி.மதியழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கரூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிமுக-வில் இருந்து விலகி, தவெக-வில் இணைந்துள்ளதால், இந்த தேர்தல் தொடர்ந்து நடத்துவது குறித்து மனுதாரர் மதியழகனின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக அவரது தரப்பு வழக்கறிஞர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என். செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் வழக்கை திரும்பப்பெற இருப்பதாக மதியழகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக மனுவாக தாக்கல் செய்யும்படி, தவெக வேட்பாளர் மதியழகன் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.
