கோவை வேளாண் கல்லூரியில் படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கேட்கக் கோரி, விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டில் மாணவியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை வேளாண் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் மாணவி தரணிகா. இவர் சமீபத்தில் கல்லூரி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
மாணவி தரணிகாவின் மரணத்திற்குப் பின்னால் உள்ள உண்மை கண்டறியப்பட வேண்டும், உரிய விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, விக்கிரவாண்டில் அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திடீரென சாலையில் திரண்டனர். அங்குள்ள முக்கியச் சாலையில் அமர்ந்து அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அனைத்தும் ஆங்காங்கே அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விக்கிரவாண்டி காவல்துறையினர், சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். “மாணவியின் மரணம் குறித்து உரிய அதிகாரிகளிடம் பேசி முறையான விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று போலீசார் உறுதியளித்தனர்.
போலீசாரின் சமாதானத்தை ஏற்றுக்கொண்ட உறவினர்கள், மறியல் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். எனினும், இந்தத் சாலை மறியல் காரணமாக விழுப்புரம் – சென்னை மற்றும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கடுமையான போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு ஸ்தம்பித்து நின்றதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
