தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்குத் திரைத்துறை மற்றும் அரசியல் என இருமுனைகளிலும் அடுத்தடுத்த நெருக்கடிகள் உருவாகியுள்ளன. அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் தணிக்கைச் சிக்கல் ஒருபுறம் நீடிக்க, மறுபுறம் சிபிஐ விசாரணை வளையத்திற்குள் அவர் சிக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் சென்சார் சான்றிதழ் தொடர்பாக ‘ரிவைசிங் கமிட்டி’ (மறுசீராய்வு குழு) இன்று (மார்ச் 9) படத்தை ஆய்வு செய்யவிருந்த நிலையில், குழு உறுப்பினருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அந்த ஆய்வு காலவரையறையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி மாதம் வெளியாக வேண்டிய இப்படம், மார்ச் மாதமாகியும் தியேட்டருக்கு வருவதில் தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

திரைப்படச் சிக்கலை விட அரசியல் ரீதியான கிடுக்குப்பிடி விஜய்க்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. கடந்த 2025 செப்டம்பர் 27-ல் கரூரில் நடைபெற்ற தவெக மாநாட்டின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்குத் தொடர்பாக ஏற்கனவே ஜனவரி மாதம் இரண்டு முறை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்த விஜய்க்கு, தற்போது மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை (மார்ச் 10) டெல்லி சிபிஐ தலைமையகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அவரது 2026 தேர்தல் பிரச்சாரத் திட்டங்களுக்குப் பெரும் முட்டுக்கட்டையாகப் பார்க்கப்படுகிறது.

தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் நேர்காணல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், இந்த விசாரணையை 10 நாட்கள் தள்ளிவைக்க வேண்டும் என்று விஜய் தரப்பில் சிபிஐ-க்கு கடிதம் அனுப்பப்பட்டதாக கூறப்படும் நிலையில், புதிய ஆதாரங்கள் மற்றும் கூடுதல் விளக்கங்கள் தேவைப்படுவதால், குறிப்பிட்ட தேதியிலேயே நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நேரத்தில் தனது கடைசித் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவது மற்றும் சிபிஐ விசாரணையின் தீவிரமடைவது என விஜய்க்கு இரட்டைச் சிக்கல்கள் சூழ்ந்துள்ளதால், தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version