பீகார் அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்கள் மற்றும் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் விலகியது குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். நிதிஷ் குமாரின் இந்த முடிவு, கூட்டணி அரசியலில் நம்பகத்தன்மை குறித்த விவாதத்தை எழுப்பியுள்ள நிலையில், இதனைத் தமிழக அரசியலோடு ஒப்பிட்டு அவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறது. அதிமுக பாஜக கூட்டணி விளைவு அதிமுகவை விழுங்கி பாஜக தமிழகத்தில் காலூன்ற தான் என பல விமர்சனங்கள் எழுப்பப்பட்டு இருந்தன. ஆனால் அவற்றை மறுத்து எடப்பாடி பழனிச்சாமி என்.டி.ஏ கூட்டணியோடு தொடர்ந்து தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இந்த சூழலில்தான் மாநிலங்களவை எம்பி -யாக போட்டியிடுவதற்காக பீகாரின் முதல்வர் நிதிஷ்குமார் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.
ஒருவேளை அவர் எம்பியாக தேர்வு செய்யப்பட்டால் பீகாரின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும் அப்போது தானாக பாஜகவின் சட்டமன்ற உறுப்பினரும் பீகாரின் துணை முதல்வருமான சாம்ராட் சௌத்ரி பீகாரின் முதல்வர் பொறுப்பை ஏற்பார் எனக்கூறப்படுகிறது.. இதே pattern தான் அதிமுகவிற்கும் நடக்கும் என பழனிச்சாமியை எச்சரித்து மாணிக்கம் தாகூர் X தள பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த பதிவில், “திரு நிதீஷ் குமார் அவர்களுக்கு வழங்கப்பட்ட அணுகுமுறையை பார்த்த பிறகு, NDA கூட்டணியில் உள்ள அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் ஒரு செய்தி தெளிவாக சென்றிருக்க வேண்டும். மோடி மற்றும் அமித் ஷா நடத்தும் இந்த கூட்டணியில், கூட்டாளிகள் உண்மையான கூட்டாளிகள் அல்ல — அவர்கள் வெறும் பயணிகள் மட்டுமே. அதனால் தான் எடப்பாடி போன்ற தலைவர்கள் அடுத்த நிறுத்தம் என்னவாக இருக்கும் என்று சிறிது பதட்டமாக இருக்கலாம்” என குறிப்பிட்டு உள்ளார்.
