மகளிர் உரிமை தொகை விரிவாக்க திட்டத்தின்கீழ் விடுபட்ட தகுதியுடைய குடும்ப தலைவிகள் கோரிக்கை விடுத்தால் அவர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ என்ற பெயரில் ரேஷன் கார்டு வைத்துள்ள மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கி வருகிறது. இந்த 1,000 ரூபாய் தகுதியான பெண்களுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் மாதம்தோறும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்ட 2ஆம் கட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 12ம் தேதி தொடங்கி வைத்தார். இதையடுத்து புதிய பயனாளிகளுக்கு பணம் வரவு வைக்கப்பட்டது.
ஆனால், விண்ணப்பித்தும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விடுபட்ட தகுதியுடைய குடும்ப தலைவிகள் கோரிக்கை விடுத்தால், அவர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், 1.30 கோடி பெண்கள் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படுவதாக கூறிய ஸ்டாலின், விடுபட்ட மகளிர் மீண்டும் உரிமைத் தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
