என்.டி.ஏ. கூட்டணி முழு வடிவம் பெற இன்னும் 24 மணிநேரம் மட்டுமே இருக்கும் நிலையில், இன்னும் கூட்டணி குறித்த முடிவை பிரேமலதா வெளியிடாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன. அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மிகப்பெரிய தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் வெள்ளிக்கிழமை, அதாவது ஜனவரி 23ஆம் தேதி, தமிழகம் வருகை தர உள்ளார். இந்த வருகை தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில் தற்போது என்.டி.ஏ. கூட்டணி முழு வடிவம் பெற இன்னும் 24 மணிநேரம் மட்டுமே இருக்கிறது. ஏனென்றால், நாளை பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களை மேடையேற்ற அதிமுக-பாஜக மும்முரமாக உள்ளது.
ஆனால், தற்போதுவரை தேமுதிகவும், புதிய தமிழகமும் தங்களது முடிவை அறிவிக்காமலேயே களத்திற்கு வெளியே உள்ளனர். இன்று புதிய தமிழகம் என்.டி.ஏ.வில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பிரேமலதா அதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் மௌனம் காத்துவருகிறார்.
