தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் தற்போது திமுக அமைச்சர் பி.கே. சேகர்பாபுவுடன் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
சென்னை தி.நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவருடன் திமுக அமைச்சர் சேகர்பாபுவும் தங்கியிருப்பதாகவும், இருவருக்கும் இடையே முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன.
ஓபிஎஸுடன் அவரது ஆதரவாளரான எம்.எல்.ஏ. ஐயப்பன், முன்னாள் எம்.பியும், ஓபிஎஸ்ஸின் மகனுமான ரவீந்திரநாத் உள்ளிட்டோரும் திமுகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது, இதனால், தற்போது அறிவாலயத்தில் ஓபிஎஸின் ஆதரவாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். தனியார் நட்சத்திர விடுதியில் அமைச்சர் சேகர் பாபுவை சந்தித்ததோடு இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றது இந்த இணைப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
சமீபத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு, சபாநாயகர் அப்பாவுவை ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். இதன் தொடர்ச்சியாக, அவர் இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, சபாநாயகர் அப்பாவு இன்று மாலை 6:30 மணிக்குத் தான் சென்னை திரும்புகிறார். இருப்பினும், சபாநாயகர் இல்லாத பட்சத்தில் சட்டப்பேரவைச் செயலாளரைச் சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சிலர் திமுகவில் இணைந்துவிட்டனர். அந்த வழியிலேயே அவரும் பயணிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைவார் எனப் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த அதிரடி முடிவு, தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
