மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான பராசக்தி படத்தின் முதல் நாள் வசூல் உலகளவில் ரூ.20 கோடியை கடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவாஜி கணேசன் அறிமுகமான ‘பராசக்தி’ (1952) என்ற பெயரைத் தலைப்பாக வைப்பதே ஒரு மிகப்பெரிய சவால். அந்தச் சவாலை ஏற்று, 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் களமாகக் கொண்டு, இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள படம்தான் பராசக்தி‘. சிவகார்த்திகேயன், ரவி மோகன் (ஜெயம் ரவி), ஸ்ரீலீலா நடிப்பில் நேற்று (ஜனவரி 10) பொங்கல் வெளியீடாக திரையிடப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
அரசில் வேலை செய்யும் சிவகார்த்திகேயன், 1965-ல் நடக்கும் இந்தித் திணிப்புக்கு எதிரான மாணவர் போராட்டத்தில் எப்படி ஈர்க்கப்படுகிறார் என்பதே கதை. அரசியல் விழிப்புணர்வுடன் தொடங்கும் போராட்டம், ஒரு கட்டத்தில் அதிகார வர்க்கத்திற்கும் (ரவி மோகன்) அவருக்கும் இடையிலான தனிப்பட்ட மோதலாக மாறுகிறது.
தனது வழக்கமான என்டர்டெயினர் பாணியை விட்டுவிட்டு, ஒரு சீரியஸான மாணவர் தலைவனாக மாற முயன்றுள்ளார் சிவகார்த்திகேயன். அவரது முயற்சி பாராட்டுக்குரியது. குறிப்பாக இன்டர்வல் காட்சியில் அவர் எடுக்கும் முடிவு கவனிக்க வைக்கிறது. அதிகாரியாக வரும் ஜெயம் ரவியின் கம்பீரமான நடிப்பு படத்திற்குத் தேவையான எடையைக் கூட்டுகிறது.
ஸ்ரீலீலாவின் காதல் காட்சிகள் படத்தின் வேகத்தைக் சற்று குறைப்பதாக இருந்ததாலும், கிளைமாக்சில் கைதட்டல் பெறுகிறார். அதர்வா, அண்ணன் தம்பி சென்டிமென்ட் காட்சிகளில் மட்டும் ஆறுதல் தருகிறார் உள்ளிட்ட விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
இந்தநிலையில் இந்த பராசக்தி படத்தின் முதல்நாள் வசூல் உலகளவில் ரூ.20 கோடியை கடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் ரூ.8 கோடி உட்பட இந்தியா முழுவதும் ரூ.11 கோடி வரை வசூலித்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும்.
சிவகார்த்திகேயனின் கரியரில் முதல்நாளில் அதிகம் வசூலித்த படமாக அமரன் (ரூ.42 கோடி) இருப்பது குறிப்பிடத்தக்கது.
