தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் மார்ச் 28-ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னையில் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார். இதற்காக தவெக சார்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம், பெரம்பூர் உள்ளிட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது.
குறிப்பாக, விஜய் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் பெரம்பூர் தொகுதியில் இருந்து இந்தப் பயணம் தொடங்க உள்ளது. அன்று ஒரே நாளில் கொடுங்கையூர், மூலக்கடை உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் மக்களைச் சந்தித்து அவர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபடவுள்ளார்.
விஜய்யுடன் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், நட்சத்திரப் பேச்சாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இந்தப் பரப்புரையில் பங்கேற்க உள்ளனர். சென்னையின் மற்ற நான்கு தொகுதிகளிலும் வாகனப் பேரணி மற்றும் வீதி வீதியாகச் சென்று மக்களைச் சந்திக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பரப்புரைக்காகப் பலத்த போலீஸ் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு சென்னையில் நடைபெறும் முதல் மிகப்பெரிய பொதுவெளிப் பரப்புரை என்பதால், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
