பிரபல ரவுடியை பிடிக்கப் பாறை மீது ஏறி கீழே இறங்க முடியாமல் தவித்த காவலர்களை தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(30). இவர் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார். பாலமுருகன் மீது தென்காசி மட்டுமல்லாமல் திருநெல்வேலி, அருப்புக்கோட்டை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுமார் 90க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக, அவரது சொந்த ஊரான கடையம் காவல் நிலையத்தில் மட்டும் 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மேலும் அவர் மீது அதிகளவு திருட்டு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. பாலமுருகன் திருடுவதில் எவ்வளவு கை தேர்ந்தவரோ அதே அளவுக்கு போலீஸ் பிடியில் இருந்து தப்புவதிலும் கைதேர்ந்தவராக இருந்துள்ளார். கேரள மாநிலத்தில் நடைபெற்ற ஒரு குற்றச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பாலமுருகன் திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையே 2 வாரங்களுக்கு முன்பு தமிழகத்தின் அருப்புக்கோட்டையில் நடைபெற்று வரும் ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தமிழ்நாடு போலீசார் பாலமுருகனை திருச்சூர் சிறையிலிருந்து அழைத்து வந்துள்ளனர். மீண்டும் அங்கு அழைத்துச் சென்றபோது திருச்சூர் சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக பாலமுருகனை போலீசார் தேடிவந்த நிலையில், சொந்த ஊரான கடையம் ராமநதி அணை அருகேயுள்ள சுமார் 1000 அடி உயரமுள்ள பொத்தையின் (சிறுபாறை) மேல் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து சிறப்புப் படையை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட காவலர்கள் நேற்றிரவு பாலமுருகனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இரவு நேரத்தில் பலத்த மழை பெய்துகொண்டிருந்த போதும், சக்திவாய்ந்த லேசர் விளக்குகளுடன் போலீசார் மலைப்பகுதியில் ஏறித் தேடினர். அப்போது, பாறையின் செங்குத்தான பகுதியில் ஏறிய 5 காவலர்கள் மீண்டும் கீழே இறங்க முடியாமல் சிக்கிக் கொண்டனர். பொத்தையின் நடுப்பகுதியில் அவர்கள் தொங்கிக் கொண்டிருந்ததால் அவர்களால் கீழே வர முடியவில்லை.

எனவே, உடனடியாக ஆலங்குளம் மற்றும் தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் வரவழைக்கப்பட்டு, இன்று (டிச.5) அதிகாலை முதற்கட்டமாக 3 போலீசார் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, மற்ற இருவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.‌ இதனிடையே மலைப்பகுதியில் சுமார் 15 மணி நேரத்திற்கு மேலாக பதுங்கியுள்ள ரவுடி பாலமுருகனை தப்பிக்க விடாமல் பிடிப்பதற்கு மலையைச் சுற்றி 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ட்ரோன் கேமரா மற்றும் அப்பகுதியை சேர்ந்த உள்ளூர்வாசிகள் உதவியுடன் ரவுடி பாலமுருகனை தேடி வருகின்றனர். இருப்பினும் போலீஸ் பிடியிலிருந்து தப்புவதில் வல்லவரான பாலமுருகனை பிடிக்கமுடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version