பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை தொடர்புபடுத்தி அவதூறு கருத்துக்களை தெரிவிக்க யூ டியூப் சேனல்களுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சியில், கல்லுாரி மாணவிகள் மற்றும் பெண்களை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2019 ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், தங்களை தொடர்பு படுத்தி அவதூறு கருத்துகளை வெளியிட யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்க கோரியும், 1கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழங்க கோரியும் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அவரது மகன் பிரவீன் ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அந்த மனுவில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தங்களை தொடர்புபடுத்தி நக்கீரன் யூடியூப், அறன் செய், ஜீவா டுடே, ஜாம்பவான், உள்ளிட்ட 8 யூடியூப் சேனல்கள் அவதூறு கருத்துக்களை வெளியிட்டிருப்பதாகவும்,
அந்த வீடியோக்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடவும் கோரியிருந்தனர்.
மேலும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தங்களை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட தடை விதிக்கவும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி
குமரேஷ் பாபு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அவரது மகன் பிரவீன் ஜெயராமன் ஆகியோரை தொடர்புபடுத்தி அவதூறு கருத்த்துக்களை தெரிவிக்க நக்கீரன் கோபால், வா.புகழேந்தி மற்றும் நக்கீரன் யூடியூப், அறன் செய், ஜீவா டுடே, ஜாம்பவான், உள்ளிட்ட 8 யூடியூப் சேனல்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
