தவெகவுடன் கூட்டணி அமைக்கலாமா? என்றிருந்த எண்ண ஓட்டத்தை திசை திருப்பி, திமுகவோடே இருக்கலாம் என்ற நிலைக்கு ராகுலை கொண்டு வர கார்கே என்ன விடயத்தை பயன்படுத்தினார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

வரும் சட்டசபை தேர்தலில் 2016-ல் போட்டியிட்டது போல் 41 தொகுதிகளும், ஆட்சியில் பங்கும் தர வேண்டும் என காங்கிரஸ் பிடிவாதமாக இருந்த நிலையில், அதனை மையப்படுத்தி திமுக கூட்டணியில் இழுபறியம் சலசப்பும் நிலவி வந்தது. காங்கிரசின் கோரிக்கைகளை நிராகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்துவராது” என ஒரே போடாக போட்டார். மறுபுறம், “தமிழகத்தில் போதிய கட்டமைப்பு இல்லாத சூழலில் காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கினால் அது அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு வழிவகுத்துவிடும் என திமுகவினர் முட்டி மோடி வந்தனர். இதனால் கோபமடைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகின்ற சட்டசபை தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தார். அதன் வெளிப்பாடாகவே, காங்கிரசும் தவெகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

“கடந்த 22 வருடங்களாக திமுக கூட்டணியில் இருப்பதால் காங்கிரசுக்கு எந்த பலனும் இல்லை. மாறாக, த.வெ.க., வுடன் கூட்டணி அமைத்தால் இளைஞர்களின் ஆதரவை பெற முடியும்; காங்கிரசை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும்” என ராகுல் நினைப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் பேசின. அதனை தொடர்ந்தே காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷொடங்கர், எம்.பி., மாணிக்கம் தாகூர், காங்கிரசின் தரவு மற்றும் பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி போன்றோர் திமுகவை சீண்டும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் மூத்த தலைவர் சிதம்பரம் வழியாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் திமுக பேச்சு நடத்தியது. அதனை தொடர்ந்து ராகுலிடம் பேசிய கார்கே, “வரும் தேர்தலில் தவெக தன் ஓட்டு வங்கியை நிரூபிக்கட்டும்; அதன் பின் அடுத்து வரும் தேர்தல்களில் அக்கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து யோசிக்கலாம். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் 22 ஆண்டுகால கூட்டணியை முறிப்பது என்பது காங்கிரஸ் மீதான நம்பகத்தன்மையை குறைத்து விடும். அதுமட்டுமில்லாமல், பார்லிமென்டில் பாஜக அரசை எதிர்கொள்ள, திமுகவின் எம்.பி.,க்கள் பலமும் நமக்கு தேவை” என கூறி சமாதானப்படுத்தியுள்ளார். மேலும் சோனியாவின் அறிவுரையும் உடன் கூறப்பட, அவர்களின் அறிவுரைகளை தொடர்ந்தே ‘சரி’ என வேண்டா வெறுப்பாக ‘ஓகே’ சொல்லியிருக்கிறார் ராகுல். அவரை இன்னும் கொஞ்சம் சமாதானப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது ராஜ்யசபா சீட். ஆக, இதையடுத்தே திமுக – காங்கிரஸ் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இங்கு காங்கிரஸ்க்கே தற்போது வெற்றி கிடைத்துள்ளது. காரணம், ஏற்கனவே காங்கிரசின் தொகுதிகளை குறைக்க எண்ணியிருந்த திமுகவுக்கு, காங்கிரசின் பீகார் தோல்வியும் நல்வாய்ப்பாக அமைந்த நிலையில் கிட்டத்த 15 சீட் கொடுத்தால் போதும் என்ற எண்ணத்திற்கு வந்திருந்ததாக சொல்லப்படுகிறது. எப்படி முட்டி மோதினாலும் பழையபடி 25 சீட் வாங்குவதே கடினம் என்ற சூழலே இருந்தது. அதனை தங்களது வியூகத்தால் மாற்றி, ‘ஆட்சியில் பங்கு’ என்ற உட்சபட்ச கோரிக்கையை வைத்து தொடர் அழுத்தம் மற்றும் நெருக்கடிகளின் மூலம் 25-க்கும் கூடுதலாக 3 சீட்டுகள் மற்றும் 1 ராஜ்யசபா பெற்றுவிட்டது காங்கிரஸ். அதுபோக, உள்ளாட்சியிலும் பங்கு வேண்டும் எனவும் கோரி வருகிறது. அந்த வகையில் பார்க்கும்போது காங்கிரசுக்கு தான் இங்கு லாபம். அதேநேரம், வாங்கிய சீட்டுகளை வெற்றி சீட்டுகளாக மாற்ற வேண்டிய பொறுப்பும் காங்கிரசுக்கு இருக்கிறது.

தற்போது வரையிலான காங்கிரசின் செயல்பாடுகளால் கொதித்து போயிருக்கும் திருமுகவினரோடு சேர்ந்த எப்படி காலத்தில் வேலை செய்யப்போகிறார்கள்? இன்னும் தொகுதிகள் பிரிக்கப்படும் போது எழப்போகும் பிரச்சனைகள் இவற்றையெல்லாம் கடந்து எப்படி வெல்லப்போகிறது காங்கிரஸ்? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version