தென்மேற்கு பருவமழை இந்த வருடன் முன்கூட்டியே தொடங்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழ்நாடு மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அக்னி வெயில் 28-ம் தேதி வரை உள்ள நிலையில், வெயிலின் தாக்கம் குறைந்து தற்போது மழையின் தாக்கம் ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக கோவை, நீலகிரி பகுதியில் 2 நாட்கள் ரெட் ஆலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புக் குழு வால்பாறை சென்று உள்ளது. கோவை சுங்கம் சிவராம் நகர் பகுதியில் மாநில பேரிடர் குழு 90 பேர் வந்து உள்ளனர்.
மீட்புக் குழுவில் 30 பேர் ஒரு குழுவாக செயல்படுவார்கள் என நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாநில பேரிடர் மீட்பு குழு இயற்கை பேரிடர்களால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க பல்வேறு பகுதிகளில் மிகவும் உதவி உள்ளது.
கோவையில் பலத்த மழை பெய்தால் 4 பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். ஒன்று சிவானந்த காலனி மேம்பாலத்திற்கு அடியிலும், ரயில் நிலையம் மேம்பாலத்திற்கு அடியிலும், உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் அடியிலும், கிக்கானி பள்ளி மேம்பாலத்தில் அடியிலும் மழைநீர் தேங்கிவிடும் அதனை அடுத்து பெரிய மோட்டார் கொண்டு மழை நீர் வெளியேற்றப்படும்.
கோவை பொறுத்த வரை பல்வேறு சாலையில் பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகிறது. மழை அதிகளவு வந்தால் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும் ஆகவே மாநகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.