சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருந்த கோபி(ஈரோடு) தொகுதியிலேயே போட்டியிட மீண்டும் விருப்ப மனு அளிக்கவுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 106வது சட்டமன்றத் தொகுதியாக அறியப்படும் கோபிச்செட்டிப்பாளையம் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. கொங்கு மண்டலத்தில் இடம்பெற்றுள்ள தொகுதி என்பதால் அதிமுகவின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. 1957ஆம் ஆண்டு முதல் சட்டமன்றத் தேர்தல்களை சந்தித்து வரும் நிலையில் காங்கிரஸ், சுதந்திரா கட்சி ஆகியவற்றின் வெற்றியை தொடர்ந்து, திமுக, அதிமுக என இரண்டு கட்சிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் தொகுதியாக மாறியது. குறிப்பாக எம்.ஜி.ஆர் முதலமைச்சராக பதவியேற்ற 1977 சட்டமன்றத் தேர்தலில் இருந்து தொடர்ந்து 5 முறை அதிமுக மட்டுமே வென்றது.
அதன்பிறகு 1996ல் திமுகவை சேர்ந்த ஜி.பி.வெங்கிடு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். 2001ஆம் ஆண்டில் மீண்டும் அதிமுக வசம் தொகுதி வந்தது. அதிலிருந்து தொடர்ந்து 5 முறை வென்று வந்துள்ளது. மொத்தமாக பார்த்தால் அதிமுக 10 முறை கொடி நாட்டியிருக்கிறது. அதில் 8 முறை செங்கோட்டையன் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக சட்டமன்றத்திற்கு சென்றுள்ளார். கடைசியாக நடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஜி.வி.மணிமாறனை 28,563 வாக்குகள் வித்தியாசத்தில் செங்கோட்டையன் தோற்கடித்திருந்தார்.
இந்நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் நெருங்கி கொண்டிருக்கிறது. யாரும் எதிர்பாராத வகையில் உட்கட்சி பூசலால் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து விஜய்யின் தவெகவில் இணைந்தார். இது அதிமுக, திமுகவிற்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இந்தநிலையில், இதனால் வரவிருக்கும் தேர்தலில் அதிமுகவிற்கு கிடைத்து வந்த பாரம்பரிய வாக்குகள் சிதறக்கூடும். இப்படியிருக்கையில், சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருந்த கோபி(ஈரோடு) தொகுதியிலேயே போட்டியிட மீண்டும் விருப்ப மனு அளிக்கவுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவிலில் தவெக அலுவலகத்தை புதன்கிழமை திறந்து வைத்து செய்தியாளா்களிடம் பேசிய அவர், தமிழகத்தை தவெக தான் ஆளப்போகிறது என்ற அவர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் தவெகவின் பெயர் ஒலித்துக்கொண்டிருக்கிறது என்றார். மேலும் தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே விஜய்யின் இலக்கு எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும்,விஜய் நடனமாடியது குறித்து விமா்சிப்பவா்கள், நயினாா் நாகேந்திரன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோா் நடனமாடியபோது விமா்சனம் செய்யவில்லை. விஜய்யின் அடுத்த சுற்றுப்பயணம் குறித்து இரண்டு நாள்களில் அறிவிப்பு வெளியாகும். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள், மக்கள் விரும்பும் மாற்றம் வரும் சட்டப் பேரவை தோ்தலில் நிறைவேறும். வெளிநாடுகளில் உள்ள தமிழா்கள் 3 லட்சம் போ் தமிழகத்துக்கு வந்து வாக்களிக்கத் தயாராக உள்ளனா்.
