புழல் சிறைக்கு சென்று வந்த பிறகும் செந்தில் பாலாஜியிடம் எந்தவித மாற்றமும் இல்லை என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதியில் நடைபெற்ற பாஜக சார்பில் தெருமுனை பிரச்சார நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,  தமிழக அரசின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் செயல்பாடுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

தமிழகம் 11 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளதாக முதலமைச்சர் பெருமையாகக் கூறி வருகிறார். ஆனால், எதார்த்த நிலவரம் வேறாக உள்ளது என்று அண்ணாமலை சாடினார். “தமிழகத்தின் முதுகெலும்பான விவசாயத் துறையில் வளர்ச்சி வெறும் 3 சதவீதமாக மட்டுமே உள்ளது. விவசாயத்திற்குத் தேவையான வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை, புதிய அணைகளும் கட்டப்படவில்லை. அமராவதி ஆற்றின் உபரி நீரை முறையாகக் கிராமங்களுக்குக் கொண்டு சேர்த்திருந்தால் விவசாயம் செழித்திருக்கும். அடிப்படைப் பணிகளைச் செய்யாமல் தமிழ்நாடு வளர்ந்துவிட்டதாகக் கூறுவது வெறும் கண்துடைப்பு” என்று அவர் விமர்சித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை இலக்கு வைத்துப் பேசிய அண்ணாமலை, கரூரில் தொடங்கி கோவை, சென்னை வரை ‘கரூர் குரூப்’ என்ற பெயரில் ஒரு கும்பல் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகப் பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தினார். “300 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்துவிட்டு வந்த பிறகும், அதே பழைய வேலைகளையே அவர் செய்து வருகிறார். டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்குப் பணம் வசூலிக்க 20 பேர் கொண்ட கும்பலை வைத்துள்ளனர். இவர்களுடைய இந்தச் செயலால் கரூரில் உள்ள நேர்மையான மக்களுக்குத் தேவையற்ற தலைகுனிவு ஏற்பட்டுள்ளது” என அவர் பேசினார்.

செந்தில் பாலாஜி தற்போது கரூரை விட்டுவிட்டு கோவையில் போட்டியிடத் திட்டமிடுவதையும் அண்ணாமலை கிண்டல் செய்தார். “கரூரில் சட்டமன்ற உறுப்பினராக இருந்துவிட்டு இப்போது கோவைக்கு மாற நினைக்கிறார். ஒரு தனி நபரால் ஒட்டுமொத்த மாவட்டத்தின் பெயரும் கெட்டுப்போயுள்ளது. கரூரின் பெருமையைச் சீர்குலைக்கும் ‘கரூர் குரூப்’ வசூல் கலாச்சாரத்திற்கு இந்தத் தேர்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version