தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தீவிரமான தேர்தல் களப்பணிகளுக்கு இடையே, திமுகவின் செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூருக்குச் சென்று வாக்களிக்காதது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின் போது அவர் கரூருக்குச் செல்வதைத் தவிர்த்து, கோவையிலேயே முகாமிட்டிருந்தார். தான் பொறுப்பு வகிக்கும் கோவை தெற்கு தொகுதியில் வாக்குப்பதிவின் போது ஏதேனும் தேவையற்ற பதற்றமோ அல்லது அசம்பாவிதங்களோ ஏற்பட்டால், அதை உடனடியாக முன்னின்று சமாளிப்பதற்காகவே அவர் கோவையிலேயே இருக்க முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்தத் தேர்தலை முன்னிட்டு கோவை தெற்கு தொகுதியிலேயே செந்தில் பாலாஜி நிரந்தரமாகக் குடியேறிவிட்டதாகவும், தொகுதிப் பணிகளில் முழு வீச்சில் கவனம் செலுத்தி வருவதாகவும் திமுக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகுதிக்குள்ளேயே தங்கி இருந்து தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கும், வாக்குப்பதிவு நாளன்று கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைப்பதற்கும் முக்கியத்துவம் அளித்ததால் அவர் கரூர் செல்லவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தனது பொறுப்பில் உள்ள தொகுதியின் பாதுகாப்பைக் கருதி அவர் எடுத்த இந்த முடிவு உடன்பிறப்புகளிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

