வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தினமும், சிலிண்டர் விலை மாதம் தோறும் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.
இந்த நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்ந்து ரூ.1,899-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் 110 ரூபாய் உயர்ந்த நிலையில் இம்மாதமும் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வீட்டு உபயோகத்திற்கான 14 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனையாகிறது.
