அமைச்சர் காந்தியை அதிகாரிகள் முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில் பிப்.05 ஆம் தேதியான நேற்று காலை நடைபெற்ற மாபெரும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, சிறந்த கைவினை கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார். முதல்வருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, த.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். ஆனால், கைத்தறி துறை சார்பில் நடந்த அந்த நிகழ்வில் துறை சார்ந்த கைத்தறி & துணி நூல் துறை அமைச்சரான காந்தி பங்கேற்கவில்லை. இது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிர்ச்சியையும் கோபத்தையும் கொடுத்திருக்கிறது. இதையடுத்து அமைச்சர் காந்தியிடம் விளக்கம் கேட்கும்படி அதிகாரிகளிடம் உத்தரவிட்டுவிட்டு தலைமைச்செயலகம் சென்ற முதல்வர் அங்கு நகராட்சி நிர்வாகம், இந்து அறநிலையத்துறை, பால்வளத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்துக்கொண்டிருந்தார்.
மறுபுறம் அதிகாரிகள் கொடுத்த தகவலை கேட்டதும் பதறிப்போய் ஓடிவந்த அமைச்சர் காந்தி பல்வேறு துறைகளின் திட்டங்களை துவக்கி வைத்துக்கொண்டிருந்த முதல்வருக்கு புத்தகம் ஒன்றை பரிசளித்தார். அதை கோபத்தோடு வாங்கிய முதல்வர், காலை நடந்த நிகழ்வில் பங்கேற்காததற்காக கடிந்து கொண்டுள்ளார். உடனே அமைச்சர் காந்தி விளக்கமளிக்க முயற்சிக்க, “வாயை மூடுங்க” என முதல்வர் கோபமடைந்துள்ளார். இதையடுத்து அருகிலிருந்த அமைச்சர் கே.என்.நேருவும் காந்தியை சற்றே அதட்டி ஓரமாக நிற்க வைத்திருக்கிறார் என்கிறது கோட்டை வட்டார தகவல்கள். நேற்று கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டிய அமைச்சர் காந்தி, நகராட்சி நிர்வாகம் தொடர்பான மற்றொரு நிகழ்வில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. முதல்வரின் கண்டிப்பிற்கு பின் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் காந்தி பங்கேற்றிருந்தார்.
முதல்வர் பங்கேற்கும் தனது துறை சார்ந்த ஒரு நிகழ்வையே அமைச்சர் புறக்கணித்ததும், அதற்காக அதிகாரிகள் மற்றும் கேமரா முன்னிலையிலேயே முதல்வர் அமைச்சரை கண்டித்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
