தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக-வில் ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி தற்பொழுது புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தடையையும் மீறி, கட்சியில் தங்களுக்கு இருக்கும் பலத்தை நிரூபிக்க எஸ்.பி.வேலுமணி தரப்பினர் அதிரடியாகப் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளனர்.

அதிமுக-வில் தற்போதைய நிலவரப்படி மொத்தம் 1800 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்று, எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்க வேலுமணி தரப்பு திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களிடம் இருந்து எஸ்.பி.வேலுமணி தரப்பினர் வெற்றிகரமாகக் கையெழுத்துக்களைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த உறுப்பினர்களின் கையெழுத்துக்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ மனுவை எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் வழங்கி, உடனடியாக அதிமுக பொதுக்குழுவைக் கூட்டக் கோரி  அழுத்தத்தைக் கொடுக்க வேலுமணி தரப்பு தீவிரமாகத் தயாராகி வருகிறது.

பொதுக்குழுவைக் கூட்டுவது மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து கட்சியின் முக்கிய மூத்த தலைவர்களான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் சென்னை மற்றும் கோவையில் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, “கட்சியில் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் எனக் கூறி வேலுமணி தரப்போ அல்லது வேறு யாராவதோ வந்து கையெழுத்து கேட்டால், பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும் எக்காரணம் கொண்டும் அதில் கையெழுத்திடக் கூடாது” என்று இபிஎஸ்  எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version