டாஸ்மாக்-கில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 41 வழக்குகள் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது.

இதுதொடர்பாக, கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த 41 வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், இந்த முறைகேடுகள் தொடர்பாக டாஸ்மாக் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், அமலாக்கத் துறை விசாரணையை முடக்கும் நோக்கில் மாநில அரசு செயல்படுவதாகவும், ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு வழக்கை நியாயமாகவும், எந்த இடையூறும் இன்றி விசாரிக்க வேண்டும் என்பதால் சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை விசாரிக்க மாநில அரசுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன் மற்றும் வி லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், வழக்குகளை வேறு விசாரணை அமைப்புகளுக்கு மாற்றுவது தொடர்பான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதங்களை கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 41 வழக்குகளிலும் டாஸ்மாக் நிர்வாகம் தான் புகார்தாரர் என்பதால், குற்றம் சாட்டப்பட்டவர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர்களை சேர்க்கும் வரை டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்குகள் முடிக்கப்பட மாட்டாது என உத்தரவாதம் அளிக்கப்படுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், வழக்கை முடிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். கீழமை நீதிமன்றம் தான் இதுசம்பந்தமாக முடிவெடுக்கும். இருப்பினும், அடுத்த விசாரணை வரை டாஸ்மாக் முறைகேடு தொடர்பான எந்த வழக்கையும் முடிக்க கோரி கீழமை நீதிமன்றங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டாம் என உள்துறை செயலாளருக்கு அறிவுறுத்துவதாக தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சேர்க்க மூன்று வாரங்கள் மனுதாரருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். மேலும், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதியப்பட்ட 41 வழக்குகளின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மூன்று வாரங்கள் தள்ளிவைத்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version