நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடத்தப்பட்ட ரத்ததான முகாமில், பேனர் வைப்பது தொடர்பாக சூர்யா ரசிகர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வரும் 23ஆம் தேதி நடிகர் சூர்யா தனது 51-வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். இதனை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட சூர்யா தலைமை நற்பணி இயக்கம் மற்றும் இளைஞரணி சார்பில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட சூர்யா ரசிகர்கள் கலந்துகொண்டு ஆர்வத்துடன் ரத்ததானம் வழங்கினர்.

இந்தநிலையில், மருத்துவமனை வளாகத்திற்குள் நடிகர் சூர்யாவின் புகைப்படத்துடன் கூடிய ரத்ததான முகாம் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்கு வந்த காவல்துறையினர், உரிய அனுமதி இல்லாமல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவற்றை உடனடியாக அகற்றுமாறு சூர்யா ரசிகர்களிடம் தெரிவித்தனர். இதற்கு சூர்யா ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முறையான அனுமதியுடன் ரத்ததான முகாமை நடத்தி வருவதாகவும், முதல்வரும் நடிகர் தான், தங்கள் அண்ணன் சூர்யாவும் நடிகர் தான் என்றனர். இதனால், போலீசார், ரசிகர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்காரணமாக மருத்துவமனை வளாகத்தில் சில நிமிடங்கள் பரபரப்பான சூழல் நிலவியது. பொதுமக்களின் நலன் கருதி நடத்தப்படும் ரத்ததான முகாம் என்பதால், இறுதியாக காவல்துறையினர் பேனர்களை வைத்திருப்பதற்கு அனுமதி அளித்தனர். இதையடுத்து நிலைமை சுமுகமாக முடிவுக்கு வந்தது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version