தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக நடக்கும் மாநாட்டிற்கு பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களுக்கு வீடியோ மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் வியூகங்களை வகுத்துவருகின்றனர். கூட்டணி தொகுதி பங்கீடு, பிரச்சாரத் திட்டங்கள் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், கடலூரில் தேமுதிக சார்பில் வரும் ஜனவரி 9ம் தேதி மக்கள் உரிமை மீட்பு மாநாடு நடைபெறவுள்ளது. இதில் தேமுதிகவினர், பொதுமக்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், தேமுதிக கழகத்தின் சார்பாக அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும், ஒன்றியம், நகர, கிளை கழக நிர்வாகிகளுக்கும், மகளிர் அணிக்கும், தலைவரை உயிர் மூச்சாய் கொண்டுள்ள அனைத்து தொடர்களுக்கும், என் வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன். நமது மாநாட்டை மிக பிரமாண்டமான வெற்றி மாநாடாக அமைத்து தரவேண்டும். நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த மாநாட்டில் தேர்தலுக்கான கூட்டணி உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாகவும், ஜனவரி இறுதிக்குள் கூட்டணியை முடிவு செய்து, கூட்டணி கட்சி தலைவர்களையும் மாநாட்டில் பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தேமுதிக வட்டாரங்கள் கூறுகின்றன.
