திருவள்ளூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை சிலர் விட்டு சென்றாலும் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளார்.

“அதிமுக என்பது மாபெரும் ஆலமரம். அதிலிருந்து ஒரு சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக செல்லலாம்; அதனால் கட்சிக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. இங்கு திரண்டுள்ள நிர்வாகிகளை பார்க்கும்போதே கட்சியின் வலிமை தெரிகிறது” என்று அவர் கூறினார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, “நாள்தோறும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுகின்றன. புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசின் தோல்விகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்” என்றார்.

வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற வேண்டும் என வலியுறுத்திய அவர், “அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சிக்காக உழைக்க வேண்டும். நான் முதலமைச்சராக இருந்தபோது மக்களுக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தினேன்; நமது முன்னோடி தலைவர்களும் தமிழ்நாட்டிற்காக பல திட்டங்களை கொண்டு வந்துள்ளனர். அவற்றை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்” என்றார்.

மாற்றுக் கட்சிக்கு சென்றவர்களைப் பற்றி குறிப்பிட்ட அவர், “அங்கு அவர்களுக்கு உரிய மரியாதை இருக்கிறதா என்பதை விரைவில் பார்ப்பீர்கள். அதிமுகவை அசைத்துப் பார்க்கலாம் என்று யாராவது நினைத்தால் அது நடக்காது” என்று கூறினார்.

கூட்டத்தில் புதிய மாவட்டச் செயலாளர் மற்றும் புதிய நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும், அனைவரும் இணைந்து கட்சியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version