தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்.ஐ.ஆா்.) பின் இன்று இறுதி வாக்காளா் பட்டியல் வெளியாகிறது. இதனை தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் மாவட்டவாரியாக வாக்காளா் விவரங்களை வெளியிடவுள்ளாா்.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27ம் தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டு இருந்தன.
நீக்கப்பட்டவா்களில் இறந்தவா்களைத் தவிர மீதம் உள்ள 66 லட்சம் வாக்காளா்களில் தகுதியானவா்களும், புதிய வாக்காளா்களும் படிவம் 6-ஐ பூா்த்தி செய்து வாக்காளா் பட்டியலில் இணைத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது. மற்றொருபுறம் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றவா்களில் உரிய தகவல்களை அளிக்காத 12,43,363 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. உரிய ஆவணங்கள் மற்றும் சுய உறுதிமொழிச் சான்றுகளை சமா்ப்பிக்குமாறு அவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19ம் தேதி முதல் பிப்ரவரி 10-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது. இதன் மூலம் விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் சரி செய்யும் பணி கடந்த 10ம் தேதி நிறைவடைந்தது.
மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் என்று காட்டப்பட்ட 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர், மீண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது. ஆனால் சுமார் 23 லட்சம் பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். அதன்படி கணக்கிடும்போது தமிழகத்தில் 5 கோடியே 65 லட்சம் என்ற அளவில் வாக்காளர்கள் எண்ணிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
