சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 3 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களைச் சபாநாயகர் அங்கீகரித்ததற்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தகுதி நீக்கப் புகார்கள் நிலுவையில் இருந்தபோது எடுக்கப்பட்ட இந்த முடிவை ரத்து செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி இந்த சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் 17-வது சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, 108 தொகுதிகளைக் கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழகம், பேரவையின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பிரதான கட்சிகளான திமுக 59 இடங்களையும், அதிமுக 47 இடங்களையும் பெற்றன. இதையடுத்து, திமுக மற்றும் அதன் கூட்டணிக் அமைப்புகளான காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றின் ஆதரவோடு தவெக புதிய அரசை அமைத்தது.

இதற்கிடையே, கடந்த மே 13-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை பெரும்பான்மை வாக்கெடுப்பின் போது, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வழிகாட்டுதலின்படி அக்கட்சியின் 25 எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த விவகாரத்தில், கட்சித்தாவல் தடைச் சட்ட விதிகளின்படி அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முறைப்படி புகார் அளித்தார்.

இந்த தகுதி நீக்கக் கோரிக்கை நிலுவையில் இருந்த காலகட்டத்தில்தான், மதுராந்தகம் தொகுதி மரகதம் குமாரவேல், பெருந்துறை தொகுதி ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி சத்தியபாமா ஆகிய 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளைத் திடீரென ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சியில் இணைந்தனர். அவர்களின் விருப்பக் கடிதங்களைச் சபாநாயகர் உடனடியாக ஏற்றுக்கொண்டதுடன், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அரசிதழில் வெளியிடப்பட்டது.

தற்போது இந்த நடவடிக்கையை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள வழக்கில், கடுமையான அரசியல் சாசனக் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. தகுதி நீக்கப் புகார்கள் விசாரணையில் இருக்கும் போது, அதிலிருந்து தப்பிக்கும் உள்நோக்கத்தோடு ஒரு மக்கள் பிரதிநிதி அளிக்கும் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்பது சட்டப்பூர்வமாகச் செல்லாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

மேலும், தகுதி நீக்க நடவடிக்கையைத் தவிர்க்கும் இத்தகைய போக்குகள், கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சிதைத்து, மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை அடியோடு நீர்த்துப் போகச் செய்யும் என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அடுத்தடுத்து நிகழும் இதுபோன்ற கட்சித்தாவல்களாலும், அதைத் தொடர்ந்து நடத்த வேண்டியுள்ள இடைத்தேர்தல்களாலும் அரசுக்குத் தேவையற்ற நிதிச்சுமை ஏற்பட்டு, பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும் மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே, மூன்று முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்றம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் மீதான தகுதி நீக்கப் புகார்களைச் சபாநாயகரே முறைப்படி விசாரித்து இறுதி முடிவெடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version