தமிழக அரசியலில் தூய்மைக்கும், நேர்மைக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு (101) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். ஒரு நூற்றாண்டு காலம் வாழ்ந்த அவர், தனது வாழ்நாளின் பெரும் பகுதியை ஏழை, எளிய மக்களின் நலனுக்காகவும், பொதுவுடைமைத் தத்துவத்திற்காகவும் அர்ப்பணித்தவர். இவரது மறைவுச் செய்தி கேட்டு தமிழகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
தியாகங்கள் நிறைந்த அரசியல் பயணம்: 1925-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த நல்லக்கண்ணு, இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் குதித்தவர். சுமார் 80 ஆண்டுகால பொதுவாழ்விற்குச் சொந்தக்காரரான இவர், விவசாயிகளுக்காகவும், அடித்தட்டு மக்களின் உரிமைகளுக்காகவும் எண்ணற்ற போராட்டங்களை முன்னெடுத்தவர். பலமுறை சிறைவாசம் அனுபவித்த போதிலும், தனது கொள்கையிலிருந்து இம்மியும் பின்வாங்காதவர்.
“பள்ளிப் பருவத்தில் காந்தியவாதியாக நல்லகண்ணு இருந்தார். அதன்பிறகு கம்யூனிஸ்ட்டாக மாறினார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் மாணவர்களைத் திரட்டி போராட்டம் நடத்தினார். திருநெல்வேலியில் நடந்த சுதந்திர போராட்டங்களில் அவர் பங்கெடுத்தார்”
குறிப்பாக, நெல்லை சதி வழக்கிற்காக அவர் அனுபவித்த சிறைத்தண்டனை அவரது உறுதிப்பாட்டிற்குச் சான்று. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த சில ஆண்டுகளில் நல்லகண்ணுவுக்கு கிளைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 1948ஆம் ஆண்டில் ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்ற போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது.
ஆயுதம் தாங்கிய போராட்டமாக இது இருந்ததாகக் கூறும் லெனின், “இந்திய அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாகத் தொடரப்பட்ட நெல்லை சதி வழக்கில் நல்லகண்ணு சேர்க்கப்பட்டார். அவரது மீசையை போலீஸ்காரர்கள் சுருட்டை வைத்துப் பொசுக்கினர். ஆனாலும், சக தோழர்களை அவர் காட்டிக் கொடுக்கவில்லை” இந்த வழக்கில் ஏழு ஆண்டுகள் நல்லகண்ணு சிறையில் இருந்துள்ளார்.
நல்லகண்ணுவின் அரசியல் பயணத்தில் விவசாய சங்கத்தின் பணிகளே பிரதானமாக இருந்துள்ளது. 1970 ஆம் ஆண்டில் நடந்த நில மீட்சிப் போராட்டத்தில் ஒரு சிலரின் கைகளில் இருந்த நிலங்களை மீட்பதற்காக இந்தியா முழுவதும் போராட்டம் நடந்தது.
அப்போது தமிழ்நாட்டில் மடங்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள் தொடர்பான விவரங்களைத் தொகுத்து சிறிய நூல் ஒன்றை நல்லகண்ணு வெளியிட்டார்.
தென் மாவட்டங்களில் 1996ஆம் ஆண்டு முக்குலத்தோர் மற்றும் தலித் மக்களுக்கு இடையே சாதிக் கலவரம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக நல்லகண்ணுவின் மாமனார் அன்னசாமி கொல்லப்பட்டார்.
“அது கொந்தளிப்பான நேரம். சற்று பிசகினாலும் அசம்பாவிதம் நடந்திருக்கும். ஆனால் அமைதியை ஏற்படுத்தும் பணியில் நல்லகண்ணு ஈடுபட்டார். ‘சிலர் செய்த தவறுக்காக ஒரு சமூகத்தையே குற்றவாளியாக்க முடியாது’ என்பதை அவர் நிலை நிறுத்தினார்”
மதுரையில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தலித் ஊராட்சித் தலைவர்கள் பதவியேற்க முடியாத சூழல் நிலவியது. இதை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருந்த நல்லகண்ணு, சுமார் நான்காயிரம் பேரைத் திரட்டி மாபெரும் உண்ணாவிரதம் இருந்தார்.
“இந்தப் போராட்டம் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தியது. 2006ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த கருணாநிதி தலைமையிலான அரசு, தேர்தலை நடத்தியே தீருவது என முடிவெடுத்து தேர்தலை நடத்தியது”
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் கிளைச் செயலாளர், இடைக் கமிட்டி செயலாளர், விவசாய சங்கத்தின் மாநில செயலாளர், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர், கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர், நிர்வாகக் குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், மாநில செயலாளர் எனப் பல பொறுப்புகளை நல்லகண்ணு வகித்துள்ளார்.
தேர்தல்களிலும் அவர் போட்டியிட்டுள்ளார். 1980ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அம்பாசமுத்திரத்தில் போட்டியிட்டு நல்லகண்ணு தோல்வியைத் தழுவினார்.
“அந்தத் தேர்தலில் அதிமுக-வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்தது. எம்.ஜி.ஆர் நேரடியாகப் பிரசாரம் செய்தார்”
கடந்த 1999ஆம் ஆண்டு கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் நல்லகண்ணு தோல்வியடைந்தார்.
அப்போது கோவையில் குண்டுவெடிப்பு சம்பவம் பிரதானமாகப் பேசப்பட்டதால், ‘முஸ்லிம்களுக்கு ஆதரவானவர் நல்லகண்ணு’ என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. “இதை மறுக்காத நல்லகண்ணு, ‘வாக்கு வங்கிக்காக மாற மாட்டோம். சிறுபான்மையினர் நலனில் எப்போதும் அக்கறையுடன் இருப்போம்’ என பிரசாரம் செய்தார்”
எளிமையின் சிகரம்: தமிழக அரசியலில் ‘தூய்மையான அரசியல்வாதி’ என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் நல்லக்கண்ணு. இவருக்குத் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட ‘தகைசால் தமிழர்’ விருதின் மூலம் கிடைத்த 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை, அப்படியே முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியவர். தனக்கெனச் சொந்தமாக ஒரு வீட்டைக் கூட வைத்துக் கொள்ளாமல், அரசு ஒதுக்கிய வீட்டிலும், பின்னர் வாடகை வீட்டிலும் வசித்த இவரது எளிமை தற்கால அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம்.
