நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் படத்தை பார்த்த தணிக்கை வாரிய குழுவினர், மதம் மற்றும் பாதுகாப்பு படை தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரை செய்தனர்.
இதை எதிர்த்து கே.வி.என். நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா, மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரைத்தது செல்லாது. ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனே வழங்கவேண்டும்” என்று தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை பெற்றது.
இதனை தொடர்ந்து விஜயின் ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காதது தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் கடந்த 15ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜனநாயகன் பட விவகாரம் தொடர்பான வழக்கை விசாரிக்க எங்களுக்கு விருப்பமில்லை, வழக்கில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை, உங்கள் தரப்பு வாதங்களை சென்னை உயர்நீதிமன்ற அமர்வில் தெரிவியுங்கள் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர். ஜனநாயகன் பட வழக்கை ஜன.20ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தொடர்ந்து இந்த வழக்கில் ஜன.27ம் தேதி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தா, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு தீர்ப்பளித்தது. அதில், ஜனநாயகன் படத்தில் மத பிரச்சனைகளை தூண்டும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்கும் தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.மேலும், தணிக்கை வாரியம் பதிலளிக்க உரிய காலஅவகாசம் அளித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று தனிநீதிபதி பி.டி.ஆஷாவுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்தநிலையில், ஜனநாயகன் படத்தை சென்சார் போர்டு ரிவ்யூ கமிட்டிக்கு தயாரிப்பு நிறுவனம் அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, மேலும் சென்சார் சான்று விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கையும் வாபஸ் பெற தயாரிப்பு கேவிஎன் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவேம் ரிவ்யூ கமிட்டி ஒரு வாரத்திற்குள் படத்தை மறு தணிக்கை செய்து சான்று வழங்கும்பட்சத்தில் பிப்.20ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
