22வது நாளாக போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்கள் ஆட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம் நடத்தியதால் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர்.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 26-ந் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரையாண்டு விடுமுறையில் போராட்டத்தை தொடங்கிய அவர்கள், பள்ளிகள் திறந்த பின்பும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதனால் பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு அறிவித்தது. இதனால் கோபமடைந்த ஆசிரியர்கள், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என அறிவித்தனர்.
அதன்படி, இன்று சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில் 22-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் திடீரென சாலையில் அமர்ந்து தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்த கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
