தமிழகச் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 234 ஆக நிர்ணயிக்கப்பட்டதற்குப் பின்னால் ஒரு சுவாரசியமான வரலாற்றுப் பின்னணி உள்ளது. 1963-ஆம் ஆண்டு நாடு தழுவிய அளவில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டபோது, அன்றைய மெட்ராஸ் மாநிலத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 41-லிருந்து 39 ஆகக் குறைக்கப்பட்டது. மக்கள் தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை குறைக்கப்பட்டதால், அதற்கு இணையாகச் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையும் குறையும் சூழல் உருவானது.

அந்தக் காலகட்டத்தில் நடைமுறையில் இருந்த விதிகளின்படி, ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் என்ற கணக்கீடு இருந்தது. இந்த விகிதத்தின்படி பார்த்தால், 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வெறும் 195 சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே தமிழகத்திற்குக் கிடைத்திருக்கும். இது மாநிலத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும், சட்டமன்ற வலிமையையும் கணிசமாகக் குறைப்பதாக அமையும் என்பதால், இதனைச் சரிசெய்ய வேண்டிய கட்டாயம் அன்றைய ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டது.

தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைவதைத் தவிர்க்கும் பொருட்டு, தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் ஒரு முக்கிய மாற்றத்தைப் பரிந்துரைத்தது. அதன்படி, ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு ஆறு சட்டமன்றத் தொகுதிகள்  என்ற புதிய விகிதாச்சாரம் உருவாக்கப்பட்டது. இதன்படி 39 நாடாளுமன்றத் தொகுதிகளை 6-ஆல் பெருக்கியபோது கிடைத்த 234 என்ற எண்ணிக்கையே, தமிழகச் சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையாக நிலைபெற்றது. இந்தச் சாதுர்யமான மாற்றத்தினால்தான், இன்றும் தமிழகம் 234 தொகுதிகள் என்ற பலத்துடன் விளங்கி வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version