பள்ளிகளில் மாணவர்களுக்கு மேஜைகள் வழங்கப்பட்ட பிறகு நேர் வரிசையாக அடுக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் அந்த கடைசி மேஜைகளில் யார் அமர்வது என்று சண்டையே வரும். குறிப்பாக கடைசி பெஞ்சில் அமரும் மாணவர்கள் சரிவர படிக்க மாட்டார்கள் என்ற கண்ணோட்டமும் உண்டு. பெற்றோருக்கு நமது குழந்தை முதல் பெஞ்சில் தான் அமர வேண்டும் என்ற ஆவலும் அதிகம்.
அப்படியிருக்க, இனி பள்ளியில் நேர் வரிசையாக மேஜைகள் அமைக்கப்படக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,
தற்போதைய வகுப்பறை அமைப்பின் மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை மாணவர்களால் சரிவர கவனிக்க முடியாத சுழல் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. எனவே, கற்பித்தலில் கவனச் சிதறலைத் தவிர்ப்பதற்காக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் வகுப்பறை இருக்கைகளை ‘ப’ வடிவில் அமைக்க பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
அனைத்து வகை பள்ளிகளிலும், வாய்ப்புள்ள வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க வேண்டும் என்றும், இதன் மூலம் கற்றலில் மாணவர்களின் ஆர்வம் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், தமிழகத்தில் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வந்த பள்ளி வகுப்பறை அமைப்பு தற்போது மாற்றம் செய்யப்பட உள்ளது.