திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற முன்னேற்பாடுகளை செய்யாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை ஆட்சியர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்றத் தவறிய அதிகாரிகளின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், துணை ஆணையர் இனிகோ திவ்யன், கோவில் செயல் அலுவலர் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.
மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், கோவில் செயல் அலுவலர் தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மாவட்ட ஆட்சியர் தரப்பு பதில்மனுவில், “நீதிமன்ற உத்தரவை மீற வேண்டுமென்ற எண்ணத்தில் எதையும் செய்யவில்லை. அப்போதிருந்த சூழலை கருத்தில் கொண்டே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காவல்துறையினரை தவறான வார்த்தைகளில் தாக்கி, பேரிகார்டுகளை தூக்கி எறிந்து பிரச்சனை செய்தனர். பக்தர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே 144 தடை உத்தரவு போடப்பட்டது. மதக்கலவரம் ஏற்படும் சூழல் இருந்ததாக தகவல் கிடைக்கப்பெற்றது. விரும்பத்தகாத செயல்கள் நடந்துவிடக் கூடாது என்பதே. ஆகவே, நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
காவல் ஆணையர் தரப்பு பதில்மனுவிலும் ஏறத்தாழ இந்த விபரங்களே குறிப்பிடப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, “கேரவன் article-ல், மலை மேலே அனுமதிக்க இயலாது. அதனால் வரும் பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம் என காவல்துறையினர் சொன்னதாக குறிப்பிட்டிருந்தார்கள்” என தெரிவித்தார்.
அதற்கு அரசுத்தரப்பில், “ஒருவேளை உண்மையாக அலுவலர், அவ்வாறு சொல்லியிருந்தால், அவர் வெளிப்படையாக மன்னிப்பு கோரட்டும்” என தெரிவித்தார். அதற்கு நீதிபதி, “நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜரான அன்று, தனியார் நாளிதழில் வந்த புகைப்படத்தில், மூவரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு வந்தது போல இல்லை, பேஸ்ட் விளம்பரத்திற்கு வருவதைப் போல புன்னகையுடன் இருந்தனர்” என தெரிவித்தார்.
அதற்கு அரசுத்தரப்பில், ” மன்னிப்பை ஏற்று அவமதிப்பு வழக்கை முடித்து வைக்க வேண்டும்” என கோரப்பட்டது.
அதற்கு நீதிபதி, ” நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆட்சியர் எப்படி 144 தடை உத்தரவை பிறப்பிக்கலாம்? அவருக்கு எவ்வளவு தைரியம்? என கேள்வி எழுப்பினார்.
அரசுத்தரப்பில், “ஒரு இளைஞரின் வாழ்வை கருத்தில் கொள்ள வேண்டும். தவறுகள் நிகழ்ந்திருக்கலாம். ஆனால், நீதிமன்றத்தை அவமதிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை. ஆகவே மாவட்ட ஆட்சியர் தரப்பில் கூடுதலாக பதில் மனுவைத் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும்” என கோரப்பட்டது.
அதையேற்ற நீதிபதி, அடுத்த விசாரணையின் போது ஆட்சியர் மட்டும் ஆஜராக வேண்டும். காவல் ஆணையர், துணை ஆணையர், செயல் அலுவலர் ஆஜராகத் தேவையில்லை என உத்தரவிட்டு வழக்கை மார்ச் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
