திருவண்ணாமலை கோவில் தாமரை குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள கோவில் குளமான தாமரை குளத்தின் நான்கு பக்கங்களிலும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களில் இருந்த மனித கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள், குளத்தில் திறந்து விடப்படுவதாகவும் கூறி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு, ஆக்கிரமிப்புகளை அரசு கண்டறிந்து 46 வாரங்கள் கடந்தும் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்து, இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.
பொதுவாக ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், திருவண்ணாமலை குளம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை கண்காணிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜனை நியமித்து உத்தரவிட்டனர்.
தாமரை குளம் ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறித்து அரசுத் துறை அதிகாரிகள் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு எந்த ஆவணத்தின் அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்பட்டது என மின்சார வாரியம் தனியாக பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 26 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.