2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் களம் டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில், போலிச் செய்திகள் மற்றும் முறையற்ற விளம்பரங்களைத் தடுக்க தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தாங்கள் பயன்படுத்தும் ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளக் கணக்குகளின் விவரங்களை வேட்புமனுத் தாக்கலின் போதே தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் வேட்பாளர்களின் டிஜிட்டல் பிரச்சாரங்கள் மற்றும் அதற்காகச் செய்யப்படும் செலவினங்களைக் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவுகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுகிறதா என்பதைக் கண்காணிக்கத் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதிச் சான்று இல்லாமல் எந்தவிதமான அரசியல் விளம்பரங்களையும் பதிவிடக் கூடாது என்று கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிடும் முன், சம்பந்தப்பட்ட வேட்பாளர் அல்லது அரசியல் கட்சி உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முறையான சான்றளிப்பு இன்றி இணையதளங்கள் அல்லது வேட்பாளர்களின் சொந்த பக்கங்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டால், அவை தேர்தல் விதிமீறலாகக் கருதப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த விளம்பரங்களுக்கான செலவு வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version