திருச்சியில் வைகோவின் நடைபயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவுள்ள நிலையில், அதில் பங்கேற்பதை காங்கிரஸ் புறக்கணிப்பதாக செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், உரிமைகளை மீட்கவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ “சமத்துவ நடைபயணம்” என்கிற பெயரில் தனது 11-வது நடைபயணத்தை திருச்சியில் இன்று (ஜன.2) தொடங்கி, மதுரையில் வரும் 12-ம் தேதி நிறைவு செய்கிறார்.
நிகழ்ச்சிக்கு, அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகிக்கிறார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகிக்கிறார். மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான துரை வைகோ வரவேற்றுப் பேசுகிறார்.
விழாவில், திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திராவிடர் கழகப் பொருளாளர் குமரேசன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்தநிலையில், இதனை புறக்கணிப்பதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். அழைப்பிதழில் விடுதலைப்புலிகள் பிரபாகரன் படம் இருந்ததால் புறக்கணிப்பதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசின் கடன் விவகாரத்தில் திமுக – காங்கிரஸ் இடையே புகைச்சல் உண்டாகியுள்ள நிலையில், இந்த விவகாரம் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
