திருச்சி எப்போதும் தமிழக அரசியலின் திருப்புமுனை மையமாகப் பார்க்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய இரு கட்சிகளும் அங்கு அடுத்தடுத்து மாநாடுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவின் 12-வது மாநில மாநாடு வருகிற மார்ச் 9ம் தேதி திருச்சியை அடுத்த சிறுகனூரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. “ஸ்டாலினே தொடரட்டும் – தமிழகம் வெல்லட்டும்” என்ற முழக்கத்துடன் நடைபெறும் இந்த மாநாட்டிற்காக 400 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட மேடை மற்றும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திமுகவின் இந்த மாநாடு முடிந்து சில நாட்களிலேயே, அதே திருச்சி மண்ணில் தமிழக வெற்றிக் கழகத்தின் 3-வது மாநில மாநாட்டை நடத்த நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்மாத இறுதியிலோ அல்லது ஏப்ரல் தொடக்கத்திலோ இந்த மாநாடு அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விக்ரவாண்டி மற்றும் மதுரையில் மாநாடுகளை வெற்றிகரமாக முடித்துள்ள விஜய், தற்போது டெல்டா மண்டலமான திருச்சியில் தனது அரசியல் பலத்தைக் காட்டத் தயாராகி வருகிறார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், இந்த இரு துருவங்களின் அடுத்தடுத்த அதிரடிகள் அரசியல் நோக்கர்களை உற்றுநோக்க வைத்துள்ளன.
திருச்சியில் மாநாடு நடத்தினால் ஆட்சியைப் பிடிக்கலாம் அல்லது தக்கவைக்கலாம் என்ற ஒரு சென்டிமென்ட் தமிழக அரசியலில் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில், திமுக தனது ஐந்தாண்டு கால சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லவும், விஜய் தனது கட்சியின் கொள்கைகளையும் தேர்தல் வாக்குறுதிகளையும் மக்களிடம் ஆழமாகப் பதிய வைக்கவும் திருச்சியைத் தேர்வு செய்துள்ளனர். ஒரே மாதத்தில் தமிழகத்தின் இரு முக்கிய ஆளுமைகள் ஒரே இடத்தில் மாநாடு நடத்தவிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
