பேராவூரணி தவெக வேட்பாளர் சந்திர காண்டீபன் மீது கஞ்சா உள்ளிட்ட குற்ற வழக்குகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில், மனைவி, குழந்தையுடன் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகம், பேராவூரணி தொகுதியில் சந்திர காண்டீபனை வேட்பாளராகக் களமிறக்கியுள்ளது. இந்நிலையில், அவர் மீது கஞ்சா வழக்கு மற்றும் குடும்பத் தகராறு தொடர்பான புகார்கள் இருப்பதாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், தன் மீது எந்தவிதமான குற்றப் பின்னணியும் இல்லை என்றும், திட்டமிட்டு பரப்பப்படும் இத்தகைய பொய்ப் பிரச்சாரங்களால் தனது குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
https://x.com/NirmalaSuku/status/2040588061000585381?
தன்னைப் பற்றிய அவதூறுகளால் பள்ளியில் பயிலும் தனது மகள்கள் மற்றும் ஆசிரியையாகப் பணியாற்றும் தனது மனைவி ஆகியோர் சமூகத்தில் பெரும் சங்கடங்களைச் சந்திப்பதாக சந்திர காண்டீபன் குறிப்பிட்டுள்ளார். ஒருகட்டத்தில் இந்த அழுத்தம் தாங்காமல் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளும் முடிவிற்கே சென்றதாக அவர் உருக்கமாகக் கூறியுள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த இக்கட்டான சூழலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தன்னை நேரில் அழைத்து தைரியம் கூறியதாக சந்திர காண்டீபன் தெரிவித்துள்ளார். “அரசியலில் இதெல்லாம் சகஜம், எதற்கும் அஞ்சாமல் மக்கள் பணியைத் தொடருங்கள்; உண்மையை நான் மக்களுக்குத் தெளிவுபடுத்துகிறேன்” என விஜய் உறுதியளித்ததாக அவர் கூறினார்.
