திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகுவதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் தவாக சார்பில் 2026 ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலில் 2 தொகுதிகள் கோரப்பட்டதாகவும், ஆனால் திமுக ஒரு தொகுதி மட்டுமே கொடுக்க முன் வந்ததாகவும் தெரிகிறது. மேலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை இன்னும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைக்கு திமுக அழைக்கவில்லை என்றும் இதனால் அக்கட்சி திமுக மீது அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னை விருகம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணியில் 10 கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி இருந்தோம். நாங்கள் வைத்த எந்த கோரிக்கைகளையும் திமுக அரசு பரிசீலிக்கவில்லை. திமுக-விடம் தவாக 2 தொகுதிகளை கேட்டது. ஆனால் திமுக ஒன்று தான் தருவதாக சொன்னார்கள்.

தமிழ் நாட்டில் அதிகாரிகளின் ஆட்சி தான் நடந்து வருகிறது. திமுக கூட்டணியில் இருந்து என்னை வெளியேற்ற அதிகாரிகள் அறிவுரை கூறி உள்ளனர். அதிகாரிகளின் பேச்சை கேட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியை திமுக புறக்கணித்துள்ளது.

தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுகிறது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். மேலும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், 3 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வருவதாகவும் வெளியான தகவலில் உண்மை இல்லை எனவும் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய அமைப்புகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு தனது அடுத்தக்கட்ட நகர்வை விரைவில் அறிவிப்பதாகவும், ஆதரவு இயக்கங்களுடன் கலந்தாலோசித்து 10 கோரிக்கைகளையும் ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version