கோடை காலத்தில் தமிழ்நாட்டில் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆய்வு கூட்டம் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் வழங்கலில் உள்ள இடர்பாடுகளை போர்க்கால அடிப்படையில் களைந்து, லாரிகளின் மூலமாகவும், புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தும், மாற்று ஏற்பாடுகள் செய்தும் சீரான குடிநீர் விநியோகம் செய்திட உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் திங்கட்கிழமைதோறும் குடிநீர் விநியோகத்தை ஆய்வு செய்து தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

அதேபோல், எதிர்வரும் மழைக்காலத்தினை கருத்தில் கொண்டு தூர்வாரும் பணிகள் மற்றும் வெள்ளத்தடுப்புப் பணிகளை துரிதப்படுத்தி காலதாமதமின்றி தொடங்க பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமைச் செயலாளர் சாய் குமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையாளர் குமரகுருபரன், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி. வினய் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version