அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகப் பெருமானின் பிறந்த நட்சத்திரமாகக் கருதப்படும் வைகாசி விசாகத்தன்று, பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்வது தொன்றுதொட்டு வரும் வழக்கமாகும். இதையொட்டி இன்று (மே 30) அதிகாலை 1 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், தொடர்ந்து உதய மார்த்தாண்ட அபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது.
கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து முருகப் பெருமானைத் தரிசித்தனர். தென்தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் இணைந்து மேற்கொண்டுள்ளன.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு, கடந்த 28-ம் தேதி முதல் வரும் 31-ம் தேதி வரை ரூ.100 கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் இலவசமாகச் சுவாமி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயில் வளாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 800 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வைகாசி விசாகத் திருநாளை முன்னிட்டு திருச்செந்தூர் நகரம் முழுவதும் பக்தர்களின் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என்ற முழக்கத்தால் விழாக்கோலம் பூண்டுள்ளது.
