ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பதவியை ராஜினாமா செய்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் நால்வர் அணியில் ஒருவராக அதிகாரம் மிக்கவராக டெல்டா அதிமுக-வில் வலம் வந்தவர். சோழமண்டல தளபதி என்றே இவரை அதிமுகவினர் அழைத்தனர். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகத் தொடர்ந்தார். பின்னர் டி.டி.வி.தினகரன் தரப்புக்கும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக தினகரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து அ.தி.மு.க-வில் இரட்டைத் தலைமை உருவானது. தினகரன் தரப்பு, எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுத்தது. அப்போது வைத்திலிங்கம் தன் ஆதரவு எம்.எல்.ஏக்களான வெல்லமண்டி நடராஜன் உட்பட பத்துக்கு மேற்பட்டவர்களை தினகரன் பக்கம் செல்லவிடாமல் தடுத்து எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு எந்தச் சிக்கலும் வராமல் அரணாக இருந்தார்.

இதைதொடர்ந்து தி.மு.க ஆட்சி அமைந்தது. அதிமுகவிற்குள் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்தது. ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளராக இருந்த வைத்திலிங்கம் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆவதைக் கடுமையாக எதிர்த்த நிலையில் பொதுச்செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி.

ஓபன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து வெளியேறி தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவைத் தொடங்கி, கட்சியை நிர்வகிக்க இரட்டை தலைமை வேண்டும் என்றும், கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைத்து கட்சியில் சேர்க்க வேண்டும் எனவும் கூறி வந்தனர்.

எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்து வந்த வைத்திலிங்கம் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என வலியுறுத்தினார். ‘2025 டிசம்பருக்குள் ஒருங்கிணைப்பு நிகழ்ந்து விடும். அது நடந்தால் மட்டுமே அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியும்’ என்றார்.

இந்நிலையில் உடல்நிலை சிகிச்சை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக வைத்திலிங்கம் வெளியில் தலைகாட்டுவதைக் குறைத்து கொண்டார். அவர் திமுக-வில் இணையப்போவதாக வந்த செய்திகளை அவரது தரப்பு மறுத்தது. சமீபத்தில், நடைபெற்ற அதிமுக உரிமை மீட்புக் குழு ஆலோசனை கூட்டத்தில் உரிமை மீட்புக் குழு, உரிமை மீட்புக் கழகம் என மாற்றப்பட்டது.
அதில் கூட ஒருங்கிணைப்பு கருத்தை முன் வைத்த வைத்திலிங்கம் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாகச் சாடினார்.

இந்தச் சூழலில் சென்னையில் இருந்த வைத்திலிங்கம் பொங்கல் பண்டிக்கைக்கு தஞ்சாவூர் வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் தங்கியிருந்த அவரை அவரது ஆதரவாளர்கள் சந்தித்தனர். பொங்கல் அன்று சொந்த ஊரான தெலுங்கன்குடிக்காட்டில் இருந்தவரை திமுக நிர்வாகிகள் சிலர் சந்தித்து பொங்கல் வாழ்த்து சொன்னார்கள். இது அரசியல் வட்டத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

வைத்திலிங்கம் திமுகவில் இணையப் போகிறார் என்கிற தகவல் காட்டுத்தீயாகப் பரவியது. இந்த முறை வைத்திலிங்கம் தரப்பு மற்றும் அவரது உதவியாளரான ராஜா உள்ளிட்ட யாரும் இதை ஆணித்தரமாக மறுக்கவில்லை.

இந்நிலையில், மறைந்த எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாள் விழாவில் தஞ்சாவூர் ரயிலடியில் உள்ள எம்..ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. அவருடைய ஆதரவாளர்களை இதற்கு வரச்சொல்லி தகவல் கொடுக்கப்பட்டது.
ஆனால் ஊரில் இருந்தும் வைத்திலிங்கம் மாலையிடச் செல்லாமல் தவிர்த்தார். அவரது ஆதரவாளர்கள் மட்டும் மாலையிட்டு மரியாதை செலுத்தினர். இது அரசியல் மட்டத்தில் உற்று கவனிக்கப்பட திமுகவிற்குள் அடைக்கலமாவது உறுதியாகி விட்டது என்றனர்.

இந்தநிலையில், இன்று காலை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதைதொடர்ந்து அறிவாலயம் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சுமார் 12:30மணியளவில் இணைய உள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version