மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு மத்திய அரசு மூடுவிழா நடத்துவதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவிப்பது மன்னிக்க முடியாத பச்சை துரோகம் என்று மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது ஒன்றிய பா.ஜ.க.; அதற்கு ஒத்து ஊதுகிறார் திருவாளர் பழனிசாமி!

100 நாட்கள் வேலை உத்தரவாதம் என்று சட்டம் இருந்தபோதே, பா.ஜ.க. ஆட்சியில் மக்களுக்கு 20 முதல் 25 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்தது. அதற்கான ஊதியத் தொகையையும் திட்டச் செலவையும் மாதக் கணக்கில் விடுவிக்காமல் வஞ்சித்தனர். அந்த நிலுவைத் தொகையையும் நாம் போராடிப் பெற வேண்டிய அவலம்தான் இருந்தது.

தற்போது, ஒன்றிய அரசின் விருப்பத்தின் பேரில் அதிகாரிகள் விரும்பினால் வேலை வழங்கலாம் என்று விதிகள் மாற்றப்பட்ட பிறகு, ஓரிரு நாட்கள் வேலை கிடைப்பதே அரிதாகப் போகிறது. நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு பேரிழப்பைச் சந்திக்கப் போகிறது.

கிராமப்புறப் பெண்கள், ஏழை விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றி வந்த திட்டத்துக்கு மூடுவிழா நடத்துவதற்குத் திருவாளர் பழனிசாமி அவர்கள் வரவேற்புப் பத்திரம் வாசிப்பது மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம்!’’ என தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version