எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக திமுக இடையேயான போட்டியில் பெருவாரியான தொகுதிகளில் அதிமுக மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கழக அமைப்புச் செயலாளர் டி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 57வது நினைவு நாளை ஒட்டி, அண்ணாவின் நினைவு இடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையிலான நிர்வாகிகள் தொண்டர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கழக அமைப்புச் செயலாளர் டி ஜெயக்குமார், தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி நடத்தி, அண்ணாவின் கனவுகளை நிலைநாட்டி சமூக நீதியை நிலை நிறுத்தியது அதிமுக என பெருமிதம் தெரிவித்தார்.

ஊழல் பற்றி விஜய் பேசுவதற்கு எந்தவித அருகதையும் இல்லை என தெரிவித்த அவர், வாங்கும் ஊதியத்தில் வெள்ளையை விட கருப்புதான் அதிகமாக இருப்பதாகவும், வாங்கும் ஊதியம் என்னவென்று வெளிப்படையாக அறிவிக்க நடிகர் விஜய்யால் முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் விஜய் செய்த வரி ஏய்ப்பு சமூகத்திற்கு தீங்கில்லையா என்று கேள்வி எழுப்பிய அவர், கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்துவிட்டு, தனது மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் நடனம் ஆடியது ஒட்டுமொத்த மக்களின் மனதையும் வாட்டி இருப்பதாக விமர்சனம் செய்தார்.

நடிகர் விஜய்யின் கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, ஆபத்தில் இருப்பவர்களுக்கு தான் விசில் தேவைப்படும் என்றும் பதிலளித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version