தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக் கணக்குகள் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டன. அதன் ஒரு பகுதியாக, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை இணைப்பதற்கான தீவிர முயற்சிகள் நடைபெற்று வருவதாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில், பாஜக தலைமையிலான NDA கூட்டணியும் விஜய்க்கு வலைவீசி வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, தவெகவுக்கு 50 தொகுதிகள் மற்றும் துணை முதலமைச்சர் பதவி வழங்க பாஜக தயாராக இருப்பதாகவும், இதன் காரணமாகவே சமீபகாலமாக விஜய் தனது உரைகளில் பாஜகவை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்து வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்றொருபுறம், கடந்த ஆண்டு செப்டம்பரில் கரூரில் நடைபெற்ற தவெக மாநாட்டின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது. இது தொடர்பாக நாளை (மார்ச் 10) டெல்லியில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இதற்குப் பதிலளித்துள்ள விஜய், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் கட்சிப் பணிகளைக் காரணம்காட்டி, 10 நாட்கள் கழித்து சிபிஐ குறிப்பிடும் மற்றொரு தேதியில் ஆஜராவதாகக் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ரகசியமாகச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை எதிரி பாஜக என்று அக்கட்சி முன்பு அறிவித்திருந்தாலும், தற்போதைய சூழலில் நிலவும் வழக்குகளும், அரசியல் நெருக்கடிகளும் கூட்டணியில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, “ஜனநாயகன்” திரைப்பட வெளியீடு மற்றும் சிபிஐ விசாரணை போன்ற அழுத்தங்களுக்கு மத்தியில், பாஜகவின் ஆஃபரை விஜய் ஏற்பாரா அல்லது தனித்துப் போட்டியிடுவாரா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை அதிமுக – பாஜக – தவெக கூட்டணி அமைந்தால், அது தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதால், அறிவாலயம் தரப்பும் இந்த நகர்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version