மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் நாளை மகளிர் தின விழா நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தவெக சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தனது எக்ஸ் பதிவில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கழகத் தலைவர் அவர்கள் பங்கேற்கும் மகளிர் தின விழா, நாளை (07.03.2026) சனிக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது.
இந்த மகளிர் தின விழாவில், சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிருக்கான திட்டங்கள் குறித்துக் கழகத் தலைவர் அவர்கள் அறிவிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பவர்களுக்கு QR குறியீட்டுடன் கூடிய நுழைவு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் வரும் 8ஆம் தேதியன்று, (08.03.2026) கழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் தின விழா கொண்டாடப்படும் என்பதையும் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம் என்று பதிவிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த விழாவில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக மகளிருக்கான திட்டங்கள் குறித்து அவர் அறிவிக்க உள்ளார். விஜய்யின் விவாகரத்து வழக்கு சர்ச்சைக்கு மத்தியில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
