SIR பணியில் நாம் பாதி கிணற்றை மட்டுமே கடந்துள்ளதாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பீகாரை தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் SIR என்கிற சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிகள் 2-ம் கட்டமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் அடுத்தாண்டு தேர்தல் நடைபெறுவதையொட்டி சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி(SIR) கடந்த மாதம் 4-ம்தேதி தொடங்கியது. இந்த பணி தொடங்கியதில் இருந்தே அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தமிழகத்தில் SIR பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், வரும் 11-ம்தேதியுடன் SIR பணிகள் முடிவடைய உள்ளது. அதன் பின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன்பின் உங்களது ஆட்சேபனைகளை தெரிவிக்க ஒருமாத காலம் அவகாசம் அளிக்கப்படும். கடைசியாக பிப்ரவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் தான் 2026-ம் ஆண்டு வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியும்.
இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில் குறைந்தது 85 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையே 6.41 கோடி தான். இதில் கிட்டதட்ட 13 சதவீத வாக்காளர் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பீகாரில் வரைவு வாக்காளர் பட்டியலில் 45 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். ஆனால் தற்போது தமிழகத்தில் முதல் கட்டமாக வரும் தகவலே 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில், என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச் சாவடி என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக மாவட்ட செயலாளர்கள், நகரம், ஒன்றியம், பேரூர் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது, SIR பணியில் நாம் பாதி கிணற்றை மட்டுமே கடந்துள்ளதாகவும், விடுபட்ட தகுதியான வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க திமுகவினர் மும்முரமாக பணியாற்ற வேண்டும் எனவும் நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
