திருச்சி திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்களின் தரம் மற்றும் அதன் விபரங்கள் குறித்து அவர் எழுப்பிய அதிரடி கேள்வி அங்கிருந்த ஊழியர்களை நிலைகுலையச் செய்துள்ளது.

கோவில் வளாகத்தில் உள்ள பிரசாத விற்பனை நிலையத்திற்குச் சென்ற அமைச்சர், அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பிரசாதங்களை ஒவ்வொன்றாக எடுத்து ஆய்வு செய்தார். அப்போது, சில பிரசாத பாக்கெட்டுகளில் அது தயாரிக்கப்பட்ட தேதியோ அல்லது காலாவதியாகும் தேதியோ குறிப்பிடப்படாமல் இருந்ததைச் சுட்டிக்காட்டி அதிகாரிகளைக் கடிந்துகொண்டார்.

தொடர்ந்து அங்கிருந்த முறுக்கு பாக்கெட் ஒன்றை எடுத்துப் பார்த்தபோது, அதில் தயாரிப்பு தேதி அச்சிடப்பட்டிருந்தது. உடனே அந்த ஊழியர்களைப் பார்த்த அமைச்சர், “இந்தத் தேதியில்தான் இந்த முறுக்கு தயாரிக்கப்பட்டது என்பதை யார் உறுதிப்படுத்தியது? இதற்கான சான்று எங்கே?” என்று யாரும் எதிர்பாராத ஒரு நறுக் கேள்வியைக் கேட்டார். அமைச்சரின் இந்தத் திடீர் கேள்வியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அதற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் விழிபிதுங்கி நின்றனர்.

மறுபுறம், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் இந்தச் சம்பவத்தால் சற்று அதிர்ந்துதான் போயுள்ளனர். பிரசாதங்கள் மற்றும் உணவுப் பொருட்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகள் சரியாக இருக்கிறதா என்று கண்காணிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், “பொருட்கள் தயாரிக்கும் இடத்திற்கே நேரில் சென்று, அது தயாராகி வெளிவரும் வரை கண்காணித்துத் தேதியிட வேண்டும்” என்று விரைவில் புதிய சுற்றறிக்கை ஏதும் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அதிகாரிகளும் உள்ளனர்.

எது எப்படியோ, பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய அமைச்சர் காட்டிய இந்த அதிரடி, கோவில் பிரசாத விற்பனையில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் எனப் பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version