தமிழ்நாட்டின் புதிய சட்டம்-ஒழுங்கு நிரந்தர டிஜிபி நியமனம் தொடர்பான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக டெல்லியில் உள்ள மத்திய பணியாளர் தேர்வாணைய (UPSC) தலைமையகத்தில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் மற்றும் உள்துறைச் செயலாளர் மணிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், தமிழக அரசு பரிந்துரைத்த மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பற்றிய விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதன் பின்னர், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் மகேஷ் குமார் அகர்வால் ஆகிய மூவரின் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல் வழங்கி, இறுதிப் பட்டியலை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது.
இந்த மூவரில் ஒருவரை தமிழ்நாட்டின் புதிய நிரந்தர டிஜிபியாக தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. காவல்துறை வட்டாரங்களின் தகவலின்படி, மகேஷ் குமார் அகர்வாலுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் சந்தீப் ராய் ரத்தோரை தற்காலிக டிஜிபியாக நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
