பகுஜன் சமாஜ் கட்சியின் (பி.எஸ்.பி.) தமிழக முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணை முழுமையாக சிபிஐ வசம் செல்லும் நிலை தற்போது உறுதியாகியுள்ளது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை தற்போதைய அரசு திரும்பப் பெற்றுள்ளது. அரசின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், அந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததன் மூலம், சிபிஐ விசாரணை மேற்கொள்வதற்கான சட்டரீதியான அனைத்து தடைகளும் நீங்கியுள்ளன.

கடந்த 2024 ஜூலை 5-ஆம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள தனது இல்லம் அருகே ஆம்ஸ்ட்ராங் மீது மர்ம கும்பல் கொடூரமாக தாக்குதல் நடத்தி கொலை செய்தது. தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களிலும் கடும் விவாதத்தை கிளப்பியது. கொலை வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் செம்பியம் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர்.

எனினும், காவல்துறையின் விசாரணையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் தொடர்ந்து குற்றம்சாட்டினர். முக்கிய சாட்சிகளிடம் முழுமையான விசாரணை நடத்தப்படவில்லை, உண்மையான சதித் திட்டத்தின் பின்னணியில் உள்ள முக்கிய குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். சிலரை கைது செய்ததோடு விசாரணை முடங்கிவிட்டதாகவும், இந்த வழக்கில் முழுமையான உண்மை வெளிவர சுயாதீன அமைப்பின் விசாரணை அவசியம் என்றும் வலியுறுத்தினர்.

இதையடுத்து ஆம்ஸ்ட்ராஙின் மனைவியும், சகோதரரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரினர். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மாநில காவல்துறையின் விசாரணை திருப்திகரமாக இல்லை என்று குறிப்பிட்டு, வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து அப்போதைய தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, மாநில காவல்துறை நியாயமான முறையில் விசாரணை நடத்தி வருவதால் சிபிஐ விசாரணை தேவையில்லை என வாதிட்டது. ஆனால், மாநிலத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, தற்போதைய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றி, உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொள்வதாகவும், சிபிஐ விசாரணைக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை என்றும் தெரிவித்து மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றது.

இதன் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முழு விசாரணையும் இனி சிபிஐ கட்டுப்பாட்டில் நடைபெறவுள்ளது. இந்த நடவடிக்கை வழக்கின் உண்மை நிலை விரைவாக வெளிச்சத்துக்கு வரும் என்ற நம்பிக்கையை ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரும், அவரது ஆதரவாளர்களும் வெளிப்படுத்தியுள்ளனர். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மற்றும் சிபிஐ எடுக்கும் நடவடிக்கைகள் மீது மாநிலம் முழுவதும் கவனம் திரும்பியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version